சென்னை: 'டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமுக' என்று வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.
சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக் கூறியதாக அவர் மீது ஆயிரம் விளக்கு போலீஸார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோ குற்றவாளி என்று அறிவித்து, வைகோவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வைகோ, நீதிமன்றம் விதித்த அபராதத் தொகை ரூ.10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் உடனே கட்டினார். அத்துடன் இந்த வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒருமாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் 'டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமுக' என்று வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி.
எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி.
டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் !
எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே !
2009 இல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார் ? அன்றைய திமுக அரசு . இதை தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.