
சென்னை: பரபரப்பான சூழலில் சென்னையில் ஜூன் 12-இல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:
ஒற்றை தலைமையில் அதிமுகவை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்
அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். ஆளுமைத் திறனுடைய ஒரு தலைவர் இல்லை. கட்சியில் எல்லோருக்கும் ஒரு நெருடல் இருக்கிறது. அந்த நெருடலைப் போக்க எல்லோரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் ஜூன் 12-இல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உளதாகி செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும். கட்சிப் பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது .
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றி கருத்துக்கள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியதுவம் பெறுகிறது.