தபால் வாக்கு முறை என்ற பெயரிலேயே அதனை எப்படி செலுத்துவார்கள் என்பது ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. இதனை தபால் வழியாக அல்லது வேறு ஏதேனும் எலக்ட்ரானிக் முறையிலும் வாக்களிக்கலாம்.
பெருநிறுவன அரசியல் முறையை உருவாக்கவே இந்த முறை கொண்டு வரப்பட்டது. தேர்தல் நேரத்தில் பெரு நிறுவன பங்குதாரர்கள் நேரில் வந்து தங்களது வாக்குகளை செலுத்த முடியாத நிலையில், தபால் வாக்கு முறையில் வாக்களிக்கலாம்.
தபால் வாக்கு அறிமுகமானது ஏன்?
இந்தியாவில் தபால் முறையில் வாக்களிக்கும் வசதி ஒரு சில குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன்படி, மாநிலத்தின் தலைவர் மற்றும் ஆயுதப் படையில் பணியாற்றுவோர் தபால் வாக்களிக்கலாம். சமீபத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் தபால் முறையில் வாக்களிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் பிழைப்புக்காக வெளிஊர்களில் தங்கி வேலை செய்யும் சாதாரண பொதுமக்கள் தபால் முறையில் வாக்களிக்க முடியாது.
அளவுக்கு அதிகமான சுயேச்சைகளால் திக்குமுக்காடிய பொதுத் தேர்தல் பற்றிய சுவாரஸ்ய தகவல்
இவர்களைத் தவிர, தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அவர்களுக்கான ஓட்டுரிமை இருக்கும் இடத்தில் அல்லாமல் வேறு இடத்தில் தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டால் தபால் வாக்களிக்கலாம் அல்லது அவர் ஓட்டளிக்கும் பகுதியிலேயே தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்டால் தேர்தல் பணிக்கான சான்றிதழை பெறலாம். இதே போல, அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஏஜெண்டுகளும் தபால் முறையில் வாக்களிக்கலாம் அல்லது தேர்தல் பணிக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இதில், காவலர்கள் உட்பட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான ஓட்டுநர் / நடத்துநர் / க்ளீனர் மற்றும் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்பவர்கள் பெரும்பாலும், அவரவர் வாக்குரிமை இருக்கும் பகுதியிலேயே பணியமர்த்தப்படுவார்கள். எனவே ஏராளமானோர் தேர்தல் பணியமர்த்தப்பட்டதற்கான சான்றிதழ் முறையிலேயே வாக்களிப்பார்கள்.
எனவே, மேற்குறிப்பிட்டபடி, வெளிநாடு வாழ் இந்தியராகவோ, மாநிலத்தின் தலைவராகவோ, ஆயுதப் படை வீரராகவோ, தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள அரசு ஊழியராகவோ இருந்தால் மட்டுமே தபால் முறையில் வாக்களிக்க முடியும். இல்லை என்றால் வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்தே ஜனநாயகக் கடைமையை ஆற்ற முடியும்.