புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் நடைமுறைகள் மீறப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாகவும், லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.