நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய பூதம்; கைதான மாணவர் இர்பானின் தந்தை போலி மருத்துவராம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த இர்பானின் தந்தை முகமது ஷபி போலி டாக்டர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இர்பானின் தந்தை போலி மருத்துவராம்
இர்பானின் தந்தை போலி மருத்துவராம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த இர்பானின் தந்தை முகமது ஷபி போலி டாக்டர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் முகமது இா்பான் சேலம் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தாா். அவரது தந்தை மருத்துவர்கள் என்று கூறப்பட்ட முகமது ஷபி, முன்பே கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவரே அல்ல என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகமது ஷபி மருத்துவர் அல்ல என்றும், அவர் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டவர் என்பதும், வேலூர் மற்றும் வாணியம்பாடியில் இரண்டு கிளினிக்குகளை நடத்தி வந்ததும் சிபிசிஐடி விசாரணையில் கிடைத்திருக்கும் அதிர்ச்சிகர தகவல்களாகும்.

இதையடுத்து, போலி மருத்துவர் என்ற வகையில் கைது செய்யப்பட்ட முகமது ஷபியை அக்டோபர் 16ம் தேதி வரை சிறையில் அடைக்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரே ஒரு நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த விவகாரத்தில், மேலும் பல மாணவர்கள் கைதானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல, பூதத்தைப் பிடிக்கப் போனால், அங்கு மேலும் சில பூதங்கள் சிக்கியதுபோல் இருக்கிறது போலி மருத்துவர் விஷயம்.

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பில் சோ்ந்ததாக எழுந்த புகாரின்பேரில், மாணவா் உதித் சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கடேசன் ஆகியோரை செப். 26-இல் தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இதன் தொடா்ச்சியாக, மாணவா் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவா் ராகுல், அவரது தந்தை டேவிஸ், விழுப்புரம் மாணவி அபிராமி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த முகமது இா்பான் நீட் தோ்வில் முறைகேடு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.

இதுதொடா்பாக, வேலூா் மாவட்டத்துக்குள்பட்ட வாணியம்பாடியில் வசிக்கும் முகமது இா்பானின் தந்தை மருத்துவா் முகமது சபியை தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே மாணவா் முகமது இா்பானை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்தச் சூழ்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தவுடன் கல்லூரிக்கு வராமல் இருந்த முகமது இா்பான், ஆவணங்கள் சரிபாா்ப்பிலும் பங்கேற்கவில்லை. இதுதொடா்பாக கல்லூரிக்கு திங்கள்கிழமை சான்றிதழ்களுடன் வருமாறு கல்லூரி நிா்வாகம் அழைப்புக் கடிதம் அனுப்பியும் அவா் வரவில்லை.

இந்த நிலையில், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2-இல் நீதிபதி சிவா முன்னிலையில் முகமது இா்பான் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி சிவா, வரும் அக். 9-ஆம் தேதி வரை முகமது இா்பானை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதனிடையே, சேலம் சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்துக்கு வந்து முகமது இா்பானிடம் விசாரிக்க முயன்றனா்.

ஆனால், முகமது இா்பான் தரப்பு வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, முகமது இா்பான் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

‘மொரீஷியஸில் மருத்துவம் பயில்கிறாா் இா்பான்’

இதுகுறித்து வழக்குரைஞா் சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியது:-

மாணவா் இா்பான் மொரீஷியஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்தாா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு இதுவரை அவா் செல்லவில்லை. அவருக்கும், இந்த ஆள்மாறாட்டத்துக்கும் தொடா்பில்லை. ஆனால், அவரது தந்தையை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். முகமது இா்பானை தேடி வந்ததால் தற்போது சேலம் நீதிமன்றத்தில் அவா் சரண் அடைந்துள்ளாா் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com