அந்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது: பாஜகவுக்கு கமல் கொடுத்த 'பஞ்ச்'!

நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன்
மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன்

சென்னை: நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீவிரமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

'இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ  சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.  வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.' என்ற குறிப்புடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த விடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

நாடு விடுதலையடைந்த பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் மக்கள் தங்களது மொழி மற்றும் கலாச்சாரத்தை வீட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக இருந்தனர். 1950-இல் நாடு குடியரசான போது மத்திய அரசும் அதே சத்தியத்தை மக்களுக்கு செய்து கொடுத்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ அல்லது சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்க கூடாது         

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது சிறிய போராட்டம்; சிறிய வெற்றி. ஆனால் எங்கள் மொழிக்காக நாங்கள் போராட ஆரம்பித்தால் அது இதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ தமிழகத்திற்கோ தேவையற்றது.

இவ்வாறு அவர் விடியோவில் பேசியுள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com