விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது! - கமல்ஹாசன் அறிவிப்பு

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
மநீம தலைவர் கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன்

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் காலியாகவுள்ள நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. 

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் முறையே திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகின்றன. இதையடுத்து இந்த இரு மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. 

இடைத்தேர்தல் அறிவிப்பையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான தீவிர வேலைகளில் ஈடுபட்டுள்ளன. அதிமுக, திமுக கட்சிகளின் சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட உள்ளன. இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டு பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021ல், ஆட்சி பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மையம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மையம் பங்கெடுக்காது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த இரு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது.  வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது; தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com