சீர்காழி ஏப் 6 தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நாகை மாவட்டம் சீர்காழி 6 வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
இதனையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா தொற்று ஏற்பட்ட நபர் வசித்த பகுதிகளைச் சுற்றியுள்ள 4,5, 6, 7, 8 ஆகிய 5 வார்டுகளை சீல் வைத்தனர்.
அப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 800 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செயய்யும் பணிகளை சுகாதாரதுறை இன்று மேற்கொள்ளவுள்ளனர். நள்ளிரவு முதல் அதிகாலை வரை சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றது. காலை எழுந்து வீட்டைவிட்டு வெளியே வந்த மக்கள் தங்கள் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீர்காழி நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.