
மதுரையில் 144 தடை உத்தரவால் வறுமையில் வாடும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ 7500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் தலைமையில் வீட்டு வாயிலில் நிற்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரையில் கரோனாணா தொற்றை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் தொழிற்சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தடையுத்தரவால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே வேலை இழந்து வறுமையில் வாடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ 7500 நிவாரண தொகை வழங்க வேண்டும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் முழு கவச உடை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட குழு சார்பில் வீட்டு வாயில் முன்பு நிற்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மேலப்பொன்னகரம் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என். நன்மாறன் பங்கேற்றார். மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் பாலா, மாவட்ட செயலர் செல்வா, தலைவர் கோபி மற்றும் பலர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியான 3 அடி தூரத்திற்கு ஒருவர் என்ற கணக்கில் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.