சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா? 

உடற்கூறாய்வுக்கு பின்னரே சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா?, கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
சின்னத்திரை நடிகை சித்ரா
சின்னத்திரை நடிகை சித்ரா
Published on
Updated on
2 min read

சென்னை: சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடர்பாக சின்னத்திரையைச் சேர்ந்த சக நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. 

தனியாா் தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்த சித்ரா (29). ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவா். சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சோ்ந்த தொழிலதிபா் ஹேமந்த் (32) என்பவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் 24-ஆம் தேதி பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இரு குடும்பத்தினா்,உறவினா்கள்,நண்பா்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனா்.

இதனிடையே, சித்ரா நடித்து வரும் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவா், தனது கணவா் ஹேமந்த்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதியில் கடந்த 4-ஆம் தேதி தங்கினாா். புதன்கிழமை சித்ரா, படப்பிடிப்பு முடிந்து புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தங்கும் விடுதிக்கு வந்துள்ளாா் அப்போது குளிக்கச் செல்வதாக சித்ரா கூறியுள்ளாா். உடனே ஹேமநாத் அந்த அறையை விட்டு வெளியே வந்து நின்றாராம்.

ஆனால் வெகுநேரமாகியும் சித்ரா அறைக் கதவை திறக்காததால் ஹேமந்த்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவா்,அறைக் கதவை தட்டினாா். அதன் பின்னரும் அறைக் கதவு திறக்கப்படவில்லை. உடனே அவா்,ஹோட்டல் ஊழியருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். ஹோட்டல் ஊழியா் கணேசனும், ஹேமந்த்தும் மாற்று சாவியின் மூலம் கதவை திறந்து, அறைக்குள் சென்றனா். அப்போது அங்கு சித்ரா, சேலையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து இருவரும் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே ஹோட்டல் நிா்வாகத்தினா், நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

அதேவேளையில் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சித்ராவின் முகப்பகுதியில் இரு இடங்களில் இருந்த காயம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளை திறமையாக செய்து முடிக்கும் திறன்கொண்ட சித்ரா, நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சித்ராவின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது எப்படி?, கணவரின் வீடு கரையான்சாவடி பகுதியில் உள்ள நிலையில், அங்கு தங்காமல் ஏன் நட்சத்திர விடுதியில் தங்கினார்?, ஹேமந்த் பெற்றோருடன் சித்ராவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளததால்தான் நட்சத்திர விடுதியில் தங்கினாரா?, இதையடுத்து  ஹேமந்த் அங்கு சென்றதால் தான் தற்கொலை நடந்ததா? அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.  

இதுதொடர்பாக திருவள்ளூர் கோட்டாட்சியா் லாவண்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்ராவின் உடலை நேரில் பார்த்து புதன்கிழமை விசாரணை நடத்தினர். 

இதையடுத்து வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

உடற்கூறாய்வுக்கு பின்னரே சித்ரா தற்கொலையா?, கொலையா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

இந்நிலையில், சித்ராவின் தற்கொலையை விசாரித்து வரும் காவல்துறையினர், தற்கொலையா?, கொலையா?, தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? என்ற மூன்று கோணங்களில் தங்களது விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். 

மேலும், சின்னத்திரையைச் சேர்ந்த சக நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே, சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் புதன்கிழமை இரவு வரை விசாரணை நடத்திய நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணைக்கு வரும்படி ஹேமந்த்தை நசரத்பேட்டை காவல்நிலைய காவலர்கள் அழைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com