

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அள்ளப்படாத குப்பைகளால், தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் நகராட்சியில் கொரடாச்சேரி பிரதான சாலை, கம்பர் தெரு, ஏ.ஆர். சாலை, மருத்துவமனை சாலை, அரசு மருத்துவமனை அருகே என பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. இந்தக் குப்பைகள் குவிந்த படியும், ஆடுகளும், மாடுகளும், நாய்களும் குப்பையை கிளறி வெளியே இழுத்தபடியும், குப்பைகள் எங்கும் பரவியுள்ளது. அள்ளப்படாத குப்பைகளின் மேல் ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உள்ளிட்டவைகள் மொய்க்கின்றன. இதனால், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி சமூக ஊடகப் பொறுப்பாளரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சமீர் கூறியது:
கூத்தாநல்லூர் நகராட்சி, சுதந்திர தினத்தன்று தமிழகத்திலேயே 3 ஆவது சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்ற நகராட்சியாகும். இது மகிழ்ச்சியானதுதான். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளையும் முழுமையாக நேரில் சென்று பார்வையிட்டால், எவ்வளவு குறைபாடுகள் உள்ளன என்பது தெரியும்.
நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது சுகாதாரம்தான். அந்த சுகாதாரத்தின் முன்னோடியான முதல் வேலையான குப்பைகள் தேங்காமல் இருப்பதுதான். நகராட்சியில் கொரடாச்சேரி பிரதான சாலை, கம்பர் தெரு, ஏ.ஆர். சாலை, மருத்துவமனை சாலை, அரசு மருத்துவமனை அருகேயுள்ள வளைவு, நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் 3 நாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை.
இது போன்று நகரத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. குவிந்துள்ள குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், குப்பைகளை கால்நடைகள் வெளியே இழுத்துப் போடுவதால், சாலை எங்கும் குப்பைகளாக உள்ளன. இதுபோன்று இருப்பதால் தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.