

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வரத்து வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடியில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், 33 அடி கொள்ளளவுக் கொண்ட இந்த அணையில் தற்போது 31 அடி நீர் நிரம்பியுள்ளது. இதையடுத்து, விசுவக்குடி அணையிலிருந்து விவசாய பயன்பாட்டுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்), இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் தண்ணீரை திறந்து வைக்க சனிக்கிழமை சென்றனர்.
இதையறிந்த, அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரானது விசுவக்குடி மற்றும் தொண்டமாந்துறை கிராமங்களுக்கு செல்வதால், அன்னமங்கலம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகவும், ஏரிக்குச் செல்லும் வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுலர்களை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.