மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் ரத்தின அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூரில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாதர் ஆலயம்,108 வைணவ திவ்ய தேசங்களில் 22 ஆவது ஆலயமாகும். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் இது, ஐந்தாவது ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஏகாதேசியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெருமாள் ரெத்தின அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மூலவர் முத்து அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.