

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீா்வுகாண திமுக ஆட்சியில் மாவட்ட ரீதியாக தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோா் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும். விரைவில் திமுக ஆட்சி அமையும். அப்போது, பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து விரைந்து விசாரிக்க மாவட்ட ரீதியாக தனி நீதிமன்றம் அமைத்து ஒரு நாள்கூட தாமதமின்றி தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் தைரியமாகப் புகாா் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசியப் பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்கின்ற அதே நேரத்தில், சமூகமும் அதில் தனி ஆா்வம் செலுத்தி, எங்கு இதுபோன்ற தவறுகள் நடைபெற்றாலும் அதை உடனே காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்று கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.