நீடாமங்கலம்: நீடாமங்கலம் காசி விசுவநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் கி.பி.1761 இல் இக்கோவில் கட்டப்பட்டது. காசிக்கு செல்ல இயலாதவர்கள் கோவிலின் அருகில் உள்ள வெண்ணாற்றில் நீராடி இக்கோவிலில் எழுந்தருளியுள்ள விசாலாட்சி சமேத காசி விசுவநாதரை தரிசனம் செய்தால் காசிக்கு சென்ற புண்ணியப்பேறு பெறுவார்கள் என்பது ஐதீகம்.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சனிஸ்வரபகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்ததை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது.
சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அர்ச்சனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை அர்ச்சகர் ஶ்ரீராம் வழங்கினார்.
இதேபோல் நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.