மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 2,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் தண்ணீர் திறப்பு தேவைக்கேற்ப குறைக்கப்பட்டு வந்தது.
கடந்த 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது 12 நாட்களுக்கு பிறகு இன்று காலை 9.30 மணி முதல் குறுவை சாகுபடிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பாசன தேவை குறைந்துள்ளதாகவும், அதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.69அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,563 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 28.30டிஎம்சி ஆக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வேகமாக சரிந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உள்ளது.