பண்ருட்டி அருகே கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற முதியவர் பலி
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கரோனா பரிசோதனையில் காய்ச்சல் மற்றும் சளி கண்டறியப்பட்ட முதியவர் வியாழக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் உயிரிழந்தார்.
பண்ருட்டி வட்டம், தொரப்பாடி பேரூராட்சி (புதுப்பேட்டை), புது நகரில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ்(60). இவரது மனைவி செல்லம்மாள்(50). இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து அண்மையில் ஊர் திரும்பினாராம். 7-ஆம் தேதி செல்லம்மாளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவர் கோவிந்தராஜ் வீட்டில் இருந்துள்ளார். புதன்கிழமை கோவிந்தராஜூக்கு, ஒறையூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்குக் காய்ச்சல் மற்றும் சளி இருப்பது தெரிய வந்தது. பரிசோதனை முடிவுக்காக எதிர்பார்த்திருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், யாரும் வரவில்லை. வருவாய்த்துறையினர் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள செல்லம்மாளிடம் அனுமதி பெற்றனர். இதையடுத்து பண்ருட்டி வட்டாட்சியர் வே.உதயகுமார், ஒறையூர் வட்டார மருத்துவ அலுவலர் வசந்த், பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் போலீஸôர் முன்னிலையில் கோவிந்தராஜ் உடல் தொரப்பாடி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முதியவர் இறப்பின் காரணமாக புதுநகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.