இ-பாஸ் பிரச்னையால் தமிழக எல்லையில் ஒரு ஜோடிக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மாட்டுபட்டியைச் சேர்ந்தவர் சேகர் மகள் பிரியங்கா. தமிழ்நாடு கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பொறியாளர் ராபின்சன். இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயிக்கப்பட்டு, மே மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக இருவருக்கும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தமிழக-கேரள எல்லையில் திருமணம் நடத்த மணமக்களின் பெற்றோர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, தமிழக கேரள தற்போதைய கட்டுப்பாடு சட்டத்தின்படி அனுமதி பெற்று கேரள - தமிழக எல்லையான சின்னாறில் நடு ரோட்டில் வைத்து இருவரின் திருமணமும் ஞாயிறு அன்று நடைபெற்றது.
சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமணத்திற்கு பின் மணமகளை, மணமகன் கோவைக்கு அழைத்துச் சென்றார்.