மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெவித்துள்ளது.
சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிடுமாறு சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்து குடிநீர் ஆலைகளை சோதனை செய்து மூடி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 682 குடிநீர் ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் குடிநீர் ஆலைகள் விண்ணப்பித்தால் உரிமம் தருவது பற்றி 15 நாளில் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் செலுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு மார்ச் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.