திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 2 ஆவது படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித்திருவிழாவின் 7-ஆம் நாள் சுவாமி சண்முகப்பெருமான் சிகப்பு பட்டு சாத்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8 ஆம் நாள் காலையில் சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை சுவாமி பச்சை சாத்தி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.