வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று, ஒடிசாவுக்கு தெற்கே 1,100 கி.மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்துக்கு தென்மேற்கே 1,330 கி.மீட்டர் தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாகவும், இந்தத் தாழ்வு மண்டலம் சூறாவளிப் புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு பகல் ஒரு மணி அளவில் ஏற்றப்பட்டது. புயல் உருவாகக் கூடி மற்றும் திடீர் காற்றுடன் மழை பெய்யும் வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
நாகையில் சனிக்கிழமை பகல் நேரத்தில் மந்தமான வானிலை நிலவியது. இருப்பினும், வெப்பம் அதிகரித்தே காணப்பட்டது. குறிப்பிடத்தக்க வானிலை மாற்றம் ஏதும் இல்லை.