திருப்பூர் மாவட்டத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் 1,626 பேருக்கு உதடு மறைக்காத சிறப்பு முகக்கவசம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் சாதாரண முகக் கவசம் அணிவதால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் செவித் திறன் குறைபாடு, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் அணிவதற்காக உதடு மறைக்காத சிறப்பு முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,626 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த முகக் கவசம் வழங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதடு மறைக்காத சிறப்பு முகக் கவசங்களை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார். இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 1,616 மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடங்களுக்கே முகக் கவசங்கள் கொண்டு சென்று வழங்கப்படும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.என்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.