திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 1600 பேர் ரயில் மூலம் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 4,200க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகக் கணக்கெடுக்கப்பட்டது. இதில் ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 200 பேர் அந்தந்த மாநிலங்களுக்குப் பேருந்து மற்றும் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்து ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் பணிபுரிந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பேருந்து மூலம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். சுகாதாரத் துறையினரின் பரிசோதனைக்குப் பின் 1,600 தொழிலாளர்களும் ரயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
1,600 பேருக்குமான பயணச்சீட்டு இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவு கோதுமை மற்றும் மைதா மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய சிறு தொகுப்பு உள்ளிட்டவை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தனித்தனியாக வருவாய்த் துறையினர் மூலம் விநியோகிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து புதன்கிழமை மாலை புறப்படும் இந்த சிறப்புரையும் வெள்ளிக்கிழமை பிகார் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.