கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி நபருக்கு கிருஷ்ணகிரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர் 32 வயது நபர். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்த இவர், கடந்த வாரம் மும்பையிலிருந்து புறப்பட்டு, கடந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடிக்கு கடந்த 17-ம் தேதி வந்தார்.
அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வருவதற்குள் இவர் கிருஷ்ணகிரியைக் கடந்து காவேரிப்பட்டினம் வழியாகச் சென்றார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு பரிசோதனைக்காக ரத்தம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இத்தகைய நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு உறுதியானது. அவர் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். அவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனத் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 பேர் காரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திருப்பினர். தற்போது இரண்டு பேர் மட்டுமே ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.