
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 16 கோடியில் அமைக்கப்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேரியல் முடுக்கி என்ற நவீன கருவியின் செயல்பாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மருத்துவக் கல்லூரியில் ரூ.71.61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆராய்ச்சி மைய ஆய்வக கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேடையில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் 15 ஆயிரத்து 792 பயனாளிகளுக்கு ரூ.37.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் ரூ. 328.60 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ. 22.37 கோடியில் முடிவுற்ற 16 திட்டப் பணிகளை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், மீனவ சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறு, குறு தொழில் முனைவோருடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் செ. ராஜூ, சி. விஜயபாஸ்கர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.