பழனியில் நிலம் தொடா்பாக இருதரப்பினருக்கிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் திரையரங்க உரிமையாளா் கைத்துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பதிமூன்று சென்ட் வீட்டுமனை தொடர்பாக திரையரங்க உரிமையாளரும் தொழிலதிபருமான நடராஜனுக்கும் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவருக்கும் மோதல் இருந்து வந்தது.
இதையும் படிக்கலாமே.. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் சரளைக் கொட்டும் பணியில் இளங்கோவன் தரப்பினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர். இதனை அறிந்த நடராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இளங்கோவன் தரப்பினரை நோக்கி நடராஜன் சுட்டார். அதில் இளங்கோவன் தரப்பினரான சுப்பிரமணி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனைக்கு சுப்பிரமணி பரிந்துரைக்கப்பட்டார்.
இதையும் படிக்கலாம்.. மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?
இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி நகர காவல்துறையினர் திரையரங்க உரிமையாளர் நடராஜனை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.