நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
இதுபற்றி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
"நீட் தேர்விலிருந்து யாருக்கும் விலக்கு கொடுக்கப்படவில்லை. நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுக நிலைப்பாடு. நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இன்று 313 பேர் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
நான் கிராமத்தில் படித்து வந்தவன் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அறிந்து உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கையைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலா சிறையிலிருந்து வெளியில் வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இன்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக நாளையே சேர வேண்டும் என்று சொல்லியிருப்பது குறித்து விசாரித்து சொல்கிறேன்.
அரசைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பாதிப்பை சரி செய்யவும், பருவமழையால் மக்கள் பாதிக்காமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் லாட்டரி தடை குறித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு நடைமுறைபடுத்துவார்கள். அவர்களிடம் முழு அதிகாரம் இருக்கிறது. சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே நீட்டை எதிர்த்துப் போராடும் ஒரே மாநிலம் தமிழகம்.
நீட்டைக் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில். திமுக அப்போது அங்கம் வகித்தது. அதை யாரும் கேள்வி கேட்கவில்லை."