தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
சுராலகோடு (கன்னியாகுமரி) 8 செ.மீ மழையும், நாகர்கோயில் 7 செ.மீ மழையும், புத்தன் அணை, பாபநாசம், மைலாடி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தலா 6 செ.மீ மழையும், இரணியல், சோலையார் தலா 5 செ.மீ மழையும், பூதப்பாண்டி, தூக்கலாய் தலா 4 செ.மீ மழையும், குளச்சல், தென்காசி, பெரியாறு தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.