அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி விலகக்கோரி கோவையில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மாநில நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும், அண்ணா பல்கலை.யின் துணைவேந்தர் சூரப்பா பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ்பாரி தலைமையில், கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டப்படி கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரியை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தனர்.
இதனால், காவல்துறை மற்றும் திமுகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து இழுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தடையை மீறி போராட்டம் நடத்திய 500- க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.