தமிழகத்திற்கு அடுத்த 2 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் நேற்று வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழை காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இதேபோல் பாலவாக்கத்தில் 14.8 செ.மீ., பாடியில் 12.4 செ.மீ., ஜார்ஜ் டவுனில் 11.2 செ.மீ., மழைப் பாதிவாகியுள்ளது. 2017 நவம்பருக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.
இதையடுத்து சென்னை எழும்பூரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு 2 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வட கடலோர மாவங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.