பெரம்பலூர்: பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என்றார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பெரம்பலூரிலிருந்து இணைய வழியாக புதன்கிழமை பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தற்போது திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து, தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தலைமைக் கழகம் அறிவிக்கும். ஆனால், பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபோதும் அந்தக் கூட்டணியை ஏற்க மாட்டார். அனிதாவை தொடங்கி எத்தனை உயிர் போனாலும், நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது. இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்த திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.
மும்மொழிக் கொள்கை குறித்து வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி விரிவாகப் பேச உள்ளார் என்றார் ராசா.