திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டை பகல் நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலும் பின்னலாடை நிறுவனங்கள், கடைகள் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் தென்னம்பாளையத்தில் பகல் நேரங்களில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் பொதுமுடக்கம் காரணமாக இரவு நேரத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் மார்க்கெட்டுக்கு விளை பொருள்கள் கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது.
மேலும், பொதுமக்கள் அதிக அளவில் இரவு நேரங்களில் மார்க்கெட்டுக்கு வராததால் விளை பொருள்கள் தேங்குவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆகவே, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் வழக்கம்போல் பகல் நேரத்தில் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.