பெங்களூரு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ந் தேதி விடுதலையாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்பட மூன்று பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடையும் நிலையில், சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தப் புரளிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார்.
அதில், சசிகலா 2021-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் என்று சிறைத் துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சசிகலா நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தியே ஆக வேண்டும். சசிகலாவின் பரோல் காலத்தைக் கணக்கிட்டு விடுதலை தேதி மாறும். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சிறைக்குச் சென்றார் சசிகலா. அவருக்கு ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஓராண்டுகள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. எனவே அபராதத்தை செலுத்தத் தவறினால், 2022-ம் தேதி ஜனவரியில்தான் சசிகலா விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.