திருநெல்வேலி: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் வணிகர்கள் தங்களது கடைகளில் பச்சைக்கொடிகளை செவ்வாய்க்கிழமை கட்டி ஆதரவு தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறக்கோரி தில்லியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு சில வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்திருந்தனர்.
பேருந்து, ஆட்டோ ஆகியவை வழக்கம்போல் இயங்கின. பேட்டை பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் தங்களின் கடைகள்தோறும் பச்சைக்கொடிகளைக் கட்டினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு மதிப்பளித்து சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெறுவது தவறில்லை. அதுகுறித்து பரிசீலித்து நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.