7.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க  உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க  உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன்முலம் நடப்பாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி  3-ஆவது முயற்சியாக     
இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. எனவே 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூஜா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் தனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போனது. ஆனால் நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூட எடுக்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாமற்றது என வாதிடப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை  7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை இறுதி செய்யக் கூடாது என இடைக்கால உத்ததரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அரசுப்பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால் தான் மாணவர்களுக்கு இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தின. அரசுப்பள்ளி மாணவர்களை  எதிரியாக பார்க்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com