மெரீனாவில் கடைகள் ஒதுக்கீட்டுப் பணி: தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி நியமனம்

மெரீனாவில் 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரியை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி
சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி

மெரீனாவில் 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரியை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர் நல சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மெரீனா கடற்கரையை சுத்தமாகப் பராமரிக்க உத்தரவிட்டது. அந்தப் பகுதியில் உள்ள மீன் சந்தை, கடைகள் உள்ளிட்டவைகளை ஒழுங்குபடுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மெரீனா கடற்கரையில் புதிதாக 900 தள்ளுவண்டி கடைகள் அமைக்கும் ஒப்பந்தப் பணியை  3 மாதத்துக்குள் தள்ளுவண்டி கடைகளை அமைத்துக் கொடுக்கவும், செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மெரீனாவில் ஏற்கெனவே இருந்த கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகளுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்படும். கடைகளை ஒதுக்கீடு செய்து வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்.

மேலும் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் புதிய மீன் அங்காடி மற்றும் மீனவர்கள் லூப் சாலையைக் கடக்காமல் கடற்கரையை அணுகுவதற்கு நடைமேம்பாலம் ஆகியவற்றை கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய அரசுதான் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நடைபாதை வியாபாரிகள் தரப்பில், மெரீனாவில் 1200-க்கும் மேற்பட்டோர் கடைகளை வைத்து வாழ்வாராம் ஈட்டி வந்த நிலையில் 900 பேருக்கு மட்டுமே மாநகராட்சி கடைகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது. எனவே மற்றவர்களையும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், 900 கடைகளில் ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்குச் சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி வேறு தகுந்த இடங்களை மாநகராட்சி கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஜனவரி 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த பணிகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வுபெற்ற சதீஷ்குமார் அக்னிகோத்ரியை நியமித்து உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் 900 தள்ளுவண்டி கடைகளில் முதல்கட்டமாக 300 வண்டிகளைக் கொள்முதல் செய்தது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com