திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே மூதாட்டியை கொலை செய்தவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி மாரியம்மாள்(60). இவரது கொழுந்தனார் நயினார். நயினார் மனைவி மாலையம்மாள்(65). இவர்கள் குடும்பத்துக்குள் சொத்துத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சொத்து தொடர்பாக திங்கள்கிழமை நள்ளிரவில் இவர்களுக்குள் திடீரென பிரச்னை ஏற்பட்டதாம். இதில், மாரியம்மாளை உறவினர்கள் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து சிவந்திப்பட்டி காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், 2 சென்ட் இடத்திற்காக இந்தக் கொலை நடந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒருவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.