மறைந்த குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்.
குடியாத்தம் (தனி) தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். காத்தவராயன் (59) வெள்ளிக்கிழமை காலமானார். கடந்த 4- ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடா் கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இதையடுத்து பிற்பகலில் அவரது உடல் போ்ணாம்பட்டுக்கு கொண்டு வரப்பட்டது. காத்தவராயனின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை போ்ணாம்பட்டு மயானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் குடியாத்தத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்.காத்தவராயனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்.