குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் கேரளப் பேரவையில் நேற்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றதோடு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளிலும் இதேபோல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசனிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கவுள்ளதையடுத்து, இந்தக் கூட்டத் தொடரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.