சிவகங்கை: கீழடி அகழாய்வில் பழங்கால எடைக்கற்கள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை: கீழடி அகழாய்வில் பழங்கால எடைக்கற்கள் கண்டெடுப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின் போது பழங்கால எடைக்கற்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கீழடியில் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறையினர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது : தமிழக அரசு தொல்லியல் துறை மூலம் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மணலூர் ஆகிய பகுதிகளில் உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கீழடியில் கடந்த ஆண்டு மேள்கொள்ளப்பட்ட ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு உள்ளது. அந்த அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளது. அதனின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன.

கீழடியில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பகுதி முழுவதும் தொழிற்சாலை என கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் மற்ற குழிகளில் கிடைக்கப் பெற்றுள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் கூடமாக செயல்பட்டிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

இதுதவிர, தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com