
அவிநாசியில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் இலங்கை தமிழர்கள் முகாமில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இம்முகாமில் உள்ள 120 குழந்தைகள் உள்பட அனைத்து பெரியவர்களுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அனைவருக்கும் கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பேரூராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், மருத்துவர்கள் மோகன்ராஜ், ஜெயந்தி, யாகசுந்தரம், மருத்துவ சுகாதார ஆய்வாளர் ரமேஷ், வட்டாட்சியர் சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.