சென்னை: கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்தியேக தொலைபேசி எண்கள் அறிவித்தும், கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஏற்படுத்தியும் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்தவும் சிகிச்சைகள் மேற்கொள்ளவும், அவ்வப்பொழுது மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை நாள்தோறும் எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 108 அவசரகால ஊர்தி சேவை 24 மணி நேரமும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவையும் திறம்பட சமாளித்து வருகிறது. இச்சவாலான சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்புகளை கையாளும் விதமாகவும், கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்று அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்பவும், கோவிட்-19 நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும். இதன் மூலம் கரோனா கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை முறைகள் மேலும் தமிழ்நாட்டில் வலுப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.