சென்னை: சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 19-ம் தேதி முதல் 12 நாள்களுக்கு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த 12 நாள்களில் குறிப்பாக இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். (அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்). இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
இதையும் படிக்கலாம்.. சென்னையில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிப்பு: தமிழக அரசு
அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.