கரோனாவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தி
சென்னை மாவட்டம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாலமுரளி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புபி பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பாலமுரளி அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.