சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை- மகன் விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இது தொடர்பான உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ள இன்றைய வழக்கின் விசாரணையிலும், 'வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முடிவு செய்வது அரசின் கொள்கை முடிவு, இதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்கத் தேவையில்லை' என்று கூறியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், 'தூத்துக்குடியில் காவல்துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது.
1996-ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.
சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.