
அனைவரையும் இந்திய கலாசாரத்தை பின்பற்ற வைத்துவிட்டது கரோனா வைரஸ் என்றார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்.
திருச்சியில், சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, புதிய கட்டடத் திறப்பு நிகழ்வில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
உலகில் இந்திய கலாசாரம், பண்பாடுகள்தான் உயர்ந்தவை என்பதை பல்வேறு வகைகளில் நிரூபிக்கமுடியும். அத்தனை தொலை நோக்குப்பார்வை கொண்டவர்கள் நமது முன்னோர்கள். ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் போது, இரு கைகளையும் குவித்து வணக்கம் சொல்வதுதான் நமது இந்திய கலாசாரம்.
ஆனால், வெள்ளையர்கள் ஆட்சிக்குப் பின்னர் கைகளை குலுக்கிக்கொள்ளும் பழக்கம் தொற்றிக்கொண்டது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பயம் காரணமாக உலக நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்திய கலாசாரத்தை பின்பற்றச் செய்து விட்டது. அவர்களின் வழக்கமான கைகுலுக்கிக்கொள்ளும் வழக்கத்தை தவிர்த்து, நமது கலாசாரமான கைகளை குவித்து வணக்கம் சொல்ல வைத்துவிட்டது. கைகொடுப்பதால் 80 சதவிகிதம் இந்நோய் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நமது பாரத பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளுக்கும் முன்பாத தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்தியபோது அனைவரும் அவரை கிண்டல் செய்தனர். ஆனால் இப்போதுதான் தூய்மை எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர வைத்துள்ளது. எனவே, அனைவரும் கைகளை அடிக்கடி கழுவுவதுடன் எப்போதும் தூய்மையாக இருக்க கற்றுக்கொள்வது அவசியம் என்றார்.
நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.மீனா, பள்ளி செயலர் எஸ். குஞ்சிதபாதம், தலைவர் ராமானுஜம், பள்ளி முதல்வர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...