
கே.எஸ்.அழகிரி
கும்பகோணம்: நடிகர் ரஜினிகாந்தின் முயற்சி வெற்றி பெறாது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள். எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. ரஜினி நல்ல நடிகர். ஆனால், எம்ஜிஆர் அல்ல. ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது, பலிக்காது. எனினும் அவரது வருகைக்கு நாங்கள் தடையாக இல்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். சிறுபான்மையினரின் ஒரே நம்பிக்கை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள்தான். எங்களால் உறுதி அளிக்க முடியும். மோடி அல்ல, மோடிக்கு மோடியே வந்தாலும் சரி. இந்தியாவிலிருந்து ஒரு சிறுபான்மையினரைக் கூட அகற்ற முடியாது. மோடி, அமித்ஷா பயமுறுத்துகின்றனர். அவர்களால் அதற்கு மேல் எதையும் செய்ய முடியாது.
அரசியல் இயக்கத்தில் தியாகிகள் மற்றும் துரோகிகள் இருப்பர். தியாகிகளை அடையாளம் காண வேண்டும் என்றால் சிரமம் ஏற்படும்போது நம்முடன் இருப்பர். துரோகிகளை அடையாளம் காண வேண்டுமென்றால் அதிகாரத்தில் இல்லாதபோது பார்க்கலாம்.
தற்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லை. ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்களால் அதிகாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்றார் அழகிரி.