
கடன் பிரச்னை காரணமாக தாயைக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (43) கணவனை இழந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து வருகின்றனர். மகன் கேரளாவில் ஒரு பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
கடன் பிரச்னை காரணமாக சொந்த வீட்டை பாக்கியலட்சுமி விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தாய் - மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த மகன் சதீஷ்குமார் (24) தாயை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாய் பாக்கியலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...