கம்பம்: வடகிழக்குப் பருவ மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்குள் நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை விநாடிக்கு 809 கன அடி தண்ணீர் வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 2,985 கன அடி தண்ணீர் அதிகமாக வந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரிப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்கலாம்.. மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?
நவம்பர் 16-ம் தேதி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 809 கன அடியாக இருந்தது. நவ.17 நிலவரப்படி பெரியாறு அணைப்பகுதியில் 16.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அணைக்கு விநாடிக்கு, 2,985 கன அடி தண்ணீர் வரத்து வந்தது.
இது பற்றி அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் கூறியது, வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடையத்தொடங்கியுள்ளதால், அணைக்குள் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.10 அடியாகவும், நீர் இருப்பு 3,242 மில்லியன் கன அடியாகவும், நீ்ரவரத்து விநாடிக்கு 2,985 கன அடியாகவும், அணையிலிருந்து விநாடிக்கு 1,167 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
அதேநேரத்தில் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணைக்குள் திங்கள்கிழமை விநாடிக்கு 8 கன அடி தண்ணீர் வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 18 கன அடி தண்ணீர் வரத்து வந்தது.
இதையும் படிக்கலாமே.. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வயது 356!
அணை நிலவரம்
நீர்மட்டம் 37.00 (மொத்த உயரம் 52.55)
நீர் இருப்பு 37.41 மில்லியன் கன அடி
நீர் வெளியேற்றம் இல்லை.
மின்சார உற்பத்தி
லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்திற்கு அணையிலிருந்து 1,167 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மின்சார நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் தற்போது மூன்று மின்னாக்கிகள் மட்டும் செயல்படுகிறது. முதல் அலகில் 39 மெகாவாட், இரண்டாவது அலகில் 26 மெகாவாட், மூன்றாவது அலகில் 42 மெகாவாட், என மொத்தம் 107 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.