மத்திய அரசு இன்று அறிவித்திருக்கும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படத் துறையில் முதன்முதலில் 108 ஆண்டுகளுக்கு முன்பு தாதா சாகேப் பால்கே என்பவர் ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தை தயாரித்தார். அவர் பெயரில் சிறந்த திரைப்பட சாதனையாளர்களுக்கு சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன்லால், சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, விஸ்வஜித் சாட்டர்ஜி, சுபாஷ் கைய் ஆகிய ஐந்து பேர் கொண்ட ஜூரி உறுப்பினர்கள் ரஜினிகாந்தை தேர்வு செய்திருப்பதாகவும், ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு இன்றும் என்றும் இனிய நண்பரும் - தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, 'தாதா சாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி அவர்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
அவரது கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினி அவர்களால் செழிக்கட்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.